
அதிகாரிகள் கையில் ஆட்சி! உருப்படுமா உள்ளாட்சி.!
கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சியில் ஆட்சி செய்து வந்தனர். தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் முடிந்து வாகை சூடியவர்கள் கொடுத்த வாக்கை மறந்து விட்டனர். குடிநீர் முதல் தெருவிளக்கு வரை ஒவ்வொரு தேவையையும் பலமுறை கேட்டு வாங்கி வேண்டிய சூழல் மக்களுக்கு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் தலைவருக்கு வேண்டியவர்கள் என்பதற்காக ஒரு வசதியும் , வேண்டாதவர்களுக்கு ஒரு சில இடையூறுகளும் செய்ததே உள்ளாட்சி தேர்தலில் நடக்கும் கொடுமை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அடிப்படை வசதிகளுக்கு இன்னுமே பல கிராமங்கள் கையேந்த வேண்டிய நிலையில் தான் உள்ளன.
மக்கள் ஏதாவது தேவைக்காக ஊராட்சிமன்ற தலைவரை பார்க்க நினைத்தால் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆட்சிக்காலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்து, ஒருவழியாக அதிகாரிகள் கையில் ஆட்சி வந்துள்ளது. அரசு அதிகாரிகளாவது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என பல்வேறு வசதிகளை செய்து கொடுப்பதில் மும்முரமாக காட்டவேண்டும்.
கிராம மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படுவது குடிநீர் , தெரு விளக்கு, சாக்கடை வசதிகள் , சாலை வசதிகளை செய்து கொடுத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். இதை செய்வது கூட குதிரைக்கொம்பு காரியமாக உள்ளது.
எங்கு பார்த்தாலும் குப்பைகள் , சாக்கடை கழிவுகள் , இரவு நேரங்களில் இருண்ட தெருக்கள் என அடிப்படை வசதிகளை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் மாறிட இப்போதுள்ள ஆட்சியாளர்களான அரசு அதிகாரிகள் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மக்கள் வரியை கொடுத்து விட்டு அடிப்படை வசதிகளுக்கு கையேந்தும் நிலையை மாறிட அரசு அதிகாரிகள் தங்களது கடைமையை முறையாக செய்தாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். மக்களுக்கான தேவையை உடனடியாக செய்து கொடுப்பதில் அரசு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
முன்னாள் தலைவர் சொல்கிறேன். சொல்வதை மட்டும் செய், என்ற பேச்சிற்கு இடம் கொடுக்காமல் அரசு அதிகாரிகள் அவர்களுடைய பணியை சரியாக செய்தால் எந்த அரசியல்வாதியும் சற்று விலகி நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
அடுத்த உள்ளாட்சி தேர்தல் வரும் வரை அரசு அதிகாரிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.