
மாசெ பதவிக்கு போட்டி போடும் மூவர்! பதவியை தக்கவைக்கும் முனைப்பில் இல.பத்மநாபன்
மடத்துக்குளம் : அக்:30
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கட்சியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2026 தேர்தல் திமுக கட்சியின் தலைமைக்கு பல்வேறு சவால்கள் நிறைந்த தேர்தலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை திமுக நிர்வாகிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக உட்கட்சி விவகாரம் சூடு பிடித்துள்ளது. உடுமலையில் தற்போது பொறுப்பு வகிக்கும் நகர செயலாளர் , தெற்கு மாவட்ட செயலாளருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு அதிகளவில் நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் உணவு அமைச்சரிடம் காரசாரமாக நகர செயலாளர் வேலுச்சாமி பேசியது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பிறகு உடுமலை தொகுதியில் மாசெ இல.பத்மநாபன் போட்டியிடுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த வேலுச்சாமி, தனது கட்சி ஆதரவாளர்களை திரட்டி பக்கம் பக்கமாக திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியது உடுமலை வட்டார கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சில தினங்களுக்கு திமுக தலைமை நடத்திய ஒன் டூ ஒன் சந்திப்பின் போது மாசெ இல.பாத்மநாபனை லெஃப்ட் ரைட் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவுக்கு உடுமலை தொகுதி தற்போது வரை கானல் நீராக இருந்து வரும் நிலையில், உடுமலை திமுக உட்கட்சி பிரச்சனை பெரிய தலைவலி தந்துள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட மா.செ மாற்றம் செய்ய திமுக தலைமை மண்டல பொறுப்பாளரிடம் அறிவுறுத்தி நிலையில், அதனை அறிந்த தற்போதைய உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டு அமைச்சர் சக்கரபாணியை நாடியுள்ளார். இந்த விசயத்தை சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை. நகர செயலாளர் பொறுப்பை சரியாக செய்ய தெரியாத வேலுச்சாமி மாசெ பொறுப்புக்கு ஆசைப்படுவது வேடிக்கையாக இருப்பதாக பேசி வருகின்றனர்.
உடுமலை மடத்துக்குளம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இதற்கு முன்பு பொறுப்பு வகித்தவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்குவதை விட புதிய நபர்களுக்கு மாசெ பொறுப்பு வழங்க வேண்டும். அதாவது கட்சியின் சீனியர்களில் சிலர் கட்சிக்காக உழைப்பவர்கள் இன்றளவிலும் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவரை திமுக தலைமை தேர்ந்தெடுக்க வேண்டும் என பரவலாக பேசப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக கொங்கு மண்டலம் என்பதால் கவுண்டர் இன சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வந்த திமுக தலைமை, தற்போது இதர சமுதாயத்திற்கு பொறுப்பு வழங்கி கெளரவிக்கலாம். இந்த மாற்றம் கூட எதிர்கால திமுக வெற்றிக்கு வழி வகுக்கும்.
திருப்பூர் தெற்கு மாவட்ட மாசெ பொறுப்புக்கான போட்டியில் தற்போதைய நிலையில் மூவர் உள்ளனர். இரா.ஜெயராமகிருஷ்ணன் EX, MLA., கே.எம்.முபாரக் அலி திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் , வேலுச்சாமி உடுமலை நகர செயலாளர் இவர்கள் மூவரில் இருவர் அதாவது ஜெயராமகிருஷ்ணன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் அமைச்சர் சக்கரபாணியிடம் கேட்டுள்ளதாகவும் , முபாரக் அலி தரப்பில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் ஆதரவு கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் உடுமலை , மடத்துக்குளம் ஆகிய இருதொகுதிகளின் வெற்றியை மனதில் வைத்து கட்சியின் முக்கிய பொறுப்பில் யாரை அமர்த்த வேண்டுமென திமுக தலைமை காய் நகர்த்துமா? என அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சாவுக்கு பிறகு இதுவரை இஸ்லாமியர்களுக்கு பொறுப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






