
தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் தலைமையிலான துணைக் குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ள நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் கிரிதரன் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை 2024 அக்டோபர் 1 முதல், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணை கண்காணிப்பு குழு இரண்டும் கலைக்கப்பட்டன.
இதை அடுத்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும் தீபங்கர்தத்தா ஆகியோர் உதிதரவிட்டதை தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் ஏழுபேர் கொண்ட புதிய மேற்பார்வை குழுவை நியமித்தது.
இந்த குழுவில் தமிழகம் சார்பாக, தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன், கேரள அரசு சார்பாக கேரள அரசின் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் பிரியேஷ், மத்திய அரசு சார்பாக இந்திய அறிவியல் ஆராய்ச்ச மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விவேக் திரிபாதி, ஆனந்த ராமசாமி ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் கடந்த மார்ச் 22- ல் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
அன்று நடைபெற்ற மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி, முல்லைப் பெரியாறு அணைக்கு, தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் தலைமையில், தமிழக மற்றும் கேரளத்தின் இரண்டு பிரதிநிதிகள் உட்படுத்தி ஐந்து பேர் கொண்ட துணைக் குழு அமைக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய (பேரிடர் மற்றும் மீட்பு பிரிவு) இயக்குனர் ராகுல் குமார் சிங் இரு மாநில முதன்மைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி அணைகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல இயக்குனர் – சென்னை கிரிதரன் தலைமையில் துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தமிழகம் சார்பாக பெரியாறு வைகை வடிநில கோட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்டம் கம்பம் செயற்பொறியாளர் செல்வம், கேரளம் சார்பாக
இடுக்கி மாவட்ட நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் லிவின்ஸ் பாபு, நீர்ப்பாசன துணை பிரிவு குமுளி உதவி நிர்வாகப் பொறியாளர் ஷிஜி ஆகியோர் உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ள நிலையில், இத்துணைக் குழுவினர் இன்று பெரியார் அணையில் ஆய்வு செய்தனர். முன்னதாக குழுத் தலைவர் கிரிதரன் தலைமையில் தமிழக அதிகாரிகள் தேக்கடி படகுத்துறையிலிருந்து தமிழக பொதுப்பணித்துறை படகில் அணைக்கு கிளம்பி சென்றனர்.
குழுவினர் பெரியார் மெயின் அணை, பேபி அணை, மதகுப்பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அணையின் பலத்தை கூட்ட செய்த பணிகளில் ஒன்றான கேபிள் ஆங்கரிங் பகுதியையும், அணையின் கசிவு நீரையும், மதகுகளின் இயக்கத்தையும் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தமிழக அதிகாரிகள், பேபி அணையை பலப்படுத்துவதற்கு உண்டான வழிவகைகள், வள்ளைக்கடவு முதல் பெரியாறு அணை வரை உள்ள வாகன பாதையை சீரமைக்கும் பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தின் தீர்மானங்கள் உயர்நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.