
8 பேர் பலியான விவகாரம் வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு பூட்டு!
8 பேர் பலியான விவகாரம்.
திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பல் சிகிச்சை பெற்று வந்த நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி, வரதன், கோணாமேடு பகுதியைச் சேர்ந்த நர்மதா, பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெய்சிலி, பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆபிசூர் ரஹமான், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த அனிதா, அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா, செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் உள்பட 10 பேரில் 8 பேர் அடுத்தடுத்து 6 மாத காலத்திற்குள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் பல் மருத்துவமனையில் இருந்து மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று பரவியதால் 8 பேர் இறந்ததாக தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையை தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவ சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து முறையாக விளக்கம் கேட்டு பல் மருத்துவரிடம் சுகாதாரத்துறை சார்பாக மாவட்ட இணை இயக்குனர் ஞானமீனாட்சி கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று (ஜூன் 3) காலை வாணியம்பாடி வட்டாட்சியர் உமா ரமையா முன்னிலையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி தனியார் பல் மருத்துவமனைக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி கூறியதாவது:-
நாங்கள் சம்பந்தப்பட்ட பல் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியிருந்தோம்.
அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. அதனால் சம்பந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு பூட்டுப் போட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் இது குறித்து எங்கள் உயர் அதிகாரி மற்றும் பல் மருத்துவ அசோசியேஷன் ஆகியோரிடம் இது சம்பந்தமாக புகார் அளிக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.