
மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்.
தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்கள்தலைமையில் நடைபெற்றது.
தேனி: ஏப்ரல் :05
தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (12.05.2024) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள ராஜீவ் காந்தி கலை அரங்கத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் வி.விக்னேஷ்வரி, ஆகியோர் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, இவ்வாண்டு 12.05.2025 அன்று நடைபெற உள்ளதையொட்டி, திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் அனைத்து பக்தர்களும் வழிபாடு செய்திட ஏதுவாகவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில், பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் எடுத்து செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்தாண்டைப்போன்று இந்தாண்டும், பக்தர்கள் பாதுகாப்புடன் எவ்வித சிரமமின்றி மங்கலதேவி கண்ணகி கோயிலில் வழிபாடு செய்து திரும்பும் பொருட்டு வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் வகையில், வாகன தரச்சான்றிழ் வழங்கப்படவுள்ளது.
மேலும், பளியன்குடி வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் மருத்துவ முகாம்கள், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளது. திருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட அனைத்து பக்தர்கள் இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வன பாதுகாவலர் மற்றும் துணை இயக்குநர் சி.ஆனந்த், மாவட்ட வன அலுவலர் ஜெ.ஆர்.சமர்த்தா,மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலெட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார், உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.விஷ்ணு பிரதீவ்,பெரியார் புலிகள் சரணாலய துணை இயக்குநர் சுரேஷ்பாபு, மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட இரு மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.