
நிலக்கோட்டை,ஏப்.4-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு அலுவலகத்தில் கல்வித்தந்தையும். முன்னாள் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவருமான பி. கே .மூக்கையா தேவர் 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மாயாண்டி வரவேற்று பேசினார். விழாவில் வெளியேற்று வெளியேற்று எம்.பி.சி. பட்டியலில் இருந்து வெளியேற்று, வழங்கிடு வழங்கிடு டிஎன்டி ஒற்றைச் சாதிச் சான்று வழங்கிடு, அமைத்திடு அமைத்திடு டி என் டி தனி நல வாரியம் அமைத்திடு என கோசங்கள் எழுப்பி பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநில கூட்டமைப்பு செயலாளர் முருகன், மாநில பொருளாளர் இளங்கோ, மாநில மகளிர் அணி செயலாளர் வசந்தி தெய்வேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் குமார், ராஜாராம், பாலசுப்பிரமணியன், ராஜாங்கம் மற்றும் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட திமுக மகளிர் அணி பொறுப்பாளரும், பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மகளிர் அணி மாநில செயலாளர் வசந்தி தெய்வேந்திரன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தின் முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் எங்களது கல்வித்தந்தை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா பி கே மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முதலில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாகவும் மற்றும் திமுக மகளிர் அணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் பாராளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக அளித்த டிஎன்டி மக்களுக்கு டி .என். சி /டி.என். டி என்று இரண்டு சாதிசான்றுகள் வழங்குவதை தவிர்த்து ஒற்றைச் சான்றாக டி.என்.டி சாதி சான்று வழங்கவும், இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்து உள்ள பிரமலைக்கள்ளர் இன மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஒரே டிஎன்டி சான்று வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் அய்யா பிறந்த தினத்தில் வைத்து, அவ்வாறு வழங்கினால் இந்த பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் மக்களும் என்றென்றைக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டு இருப்போம் தெரிவித்தார்.