June 8, 2025
பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கட்டுப்பாட்டு அறை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி.

பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கட்டுப்பாட்டு அறை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கட்டுப்பாட்டு அறை மற்றும் கல்வெட்டை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று(08.02.2025) திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் பகுதி மற்றும் அடிவாரம் பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்கவும், வாகன போக்குவரத்தை சீராக அமைக்கவும் 4 மெகாபிக்சல் திறன்கொண்ட 290 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் கட்டுப்பாட்டு அறை பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குற்றச் செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவு எண்களை எளிதில் கண்டறியும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பெற்ற பின்னர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான தமிழ்க்கடவுள் இருக்கும் பழனி நகருக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் உட்பட திருவிழாக்காலங்களில் பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளது.

எனவே, பழனி நகருக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழனி நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும், வாகன போக்குவரத்தை சீராக அமைப்பதற்காகவும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50.00 இலட்சம் மற்றும் பழனி நகராட்சி நிதியிலிருந்து ரூ.15.00 இலட்சம் என மொத்தம் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர் முழுவதும் சுமார் 290 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் இன்று இயக்கி வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் பழனி நகரில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 58 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் – பழனி சாலையில் சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாழையூத்து ஆகிய இடங்களில் இரயில்வே மேம்பாலங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல், பழனி – தாராபுரம் சாலையில் 4 வழி மேம்பாலம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகள், நெய்க்காரப்பட்டி மற்றும் கீரனுார் பேரூராட்சிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 73 ஊராட்சிகள் ஆகிய பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ரெட்டியார்சத்திரத்தில் பொறியியல் கல்லுாரி தொடங்கப்பட்டது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை சார்பில் ஏராளமான கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவருக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி நகராட்சித் தலைவர் திருமதி ஆர்.உமாமகேஸ்வரி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.எஸ்.மாரிமுத்து, பழனி கவல் துணை கண்காணிப்பாளர் திரு.எஸ்.தனஞ்ஜெயன், பழனி நகராட்சித் துணைத்தலைவர் திரு.கே.கந்தசாமி, நகராட்சி ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன், பழனி வட்டாட்சியர் திரு.பா.பிரசன்னா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.