June 8, 2025
கந்தர்வகோட்டை அருகே நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு.

கந்தர்வகோட்டை அருகே நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு.

கந்தர்வகோட்டை ஜன 22.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் த
அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நீர் மேலாண்மை குறித்த கருத்துரங்கம் வானவில் மன்றத்தின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரஹ்மத்துல்லா நீர் மேலாண்மை குறித்து பேசும்பொழுது

நீரின் தேவை இந்த உலகில் வாழும் அனைவருக்கும் இன்றியமையாதது.
இதை தான் திருவள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்ற குறள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தண்ணீர் அதிகம் கிடைக்கக்கூடிய மழைக்காலத்தை விட, நீர் கிடைக்காத கோடை காலத்தில் தான் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது என்றே சொல்லலாம். நிலத்தடி நீர் வறண்டு காணப்படுவதால் நீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீரின் மேலாண்மையை உயர்த்த வேண்டும்.

தண்ணீர் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். நீரின் முக்கியத்துவத்தை அறிந்து நம் முன்னோர்கள் பலவழியில் நீரை சேமித்தனர். தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வளவு முக்கியமோ அதே போன்று நீரும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.முன்னோர்கள் நீரை சேமிப்பதற்காக தான் குளம், ஏறி, கால்வாய் போன்றவற்றை உருவாக்கினார்கள். மழை பெய்யும் போது அந்த நீர் யாருக்கும் உபயோகப்படாமல் கடலில் சென்று கலக்க கூடாது, அதனை சேகரிக்க வேண்டும் என்று குளம், ஏரி, கால்வாய்களை அமைத்தனர்.
இப்படி குளம், ஆறு, ஏரி, குட்டைகள், ஊருணிகள், அணைகளில் நீர் சேமிக்கப்படுவதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும், நிலம் வறண்டு போவதும் தடுக்கப்படும்.

நீர் மேலாண்மை அடைவதற்கு கிணறுகள், குளங்கள் போன்றவற்றை அமைத்து நீரை சேமிக்க வேண்டும். அல்லது ஏற்கனவே இருக்கின்ற குளங்கள், கால்வாய்களை பராமரிக்க வேண்டும். சிறு ஓடைகளில் குறுக்கே தடுப்பனைகள் கட்டி மழை நீரை சேமிக்கலாம் என்று பேசினார். நீர் மேலாண்மை குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.