
கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 184 வது பிறந்த நாள் விழா : தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை
தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கூடலூர் நகராட்சி, லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில், கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 184-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி), ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு விவசாயத்திற்கும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்து, விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்றவாறு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டைடல் பூங்காவினை உருவாக்கி, ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளார்கள்.
பென்னிகுவிக் அவர்களின் 184-ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மேற்கு நோக்கி பாயும் முல்லை பெரியாறு நதியின் குறுக்கே அணையை கட்டியதன் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துள்ளார்.
தமிழ்நாடு வரலாற்றில் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பெற்றுள்ள பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழ்நாடு செழிப்பதற்கு காரணமாக அமைந்தவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். அவர்களின் புகழ் என்று நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது,
கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்கள் பற்றி தேனி மாவட்டத்தில் அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இந்தியாவில் இராணுவ பொறியாளராக பணியாற்றிய, பென்னிகுவிக் அவர்கள் தலைமையில் 1885-ஆம் ஆண்டில் முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு இயற்கை இடையூறுகள் மற்றும் இன்னல்களுக்கிடையே 1895-ஆம் ஆண்டில் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தார்.
விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்தில் மேற்கே பாயும் முல்லைபெரியாறு அணையை கிழக்கே திருப்பிவிட்டு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான குடிநீர் மற்றும் விவசாய பாசத்திற்கான தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு, இன்றளவும் பயன்பெற்று வருகிறது- இதனால் பென்னிகுவிக் அவர்கள் இப்பகுதி மக்களின் கடவுளாகவே கருதப்படுகிறார்.
பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும், இவ்விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பென்னிகுவிக் அவர்களின் தானிய வரைபட ஓவியத்தினை மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு வழங்கினார்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், இவ்விழாவில் கோலிகுண்டு, கிட்டி, பம்பரம் சுற்றுதல், மான்கொம்பு சுற்றுதல், சிலம்பாட்டம், போன்ற விளையாட்டு போட்டிகளும் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நையாண்டி மேளம், தப்பாட்டம், தேவராட்டம், கரகாட்டம், மாடாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களின் சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் மாட்டுவண்டி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தென்னங்கீற்றுகளால் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. உரல், அம்மிக்கல், போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உழவர்களின் ஏர் கலப்பை வடிவத்தில் செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டிருந்தது.
பென்னிகுவிக் அவர்களின் 184-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மொத்தம் 184 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வெளிநாட்டினர் கலந்து கொண்டு இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
இவ்விழாவில், நகர்மன்றத்தலைவர்கள் பத்மாவதிலோகந்துரை(கூடலூர்), வனிதா நெப்போலியன் (கம்பம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணி, துணை ஆட்சியர் (பயிற்சி) டினு அரவிந்த், செயற்பொறியாளர் (பெரியார் வைகை வடிநில கோட்டம், மதுரை) பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன் வட்டாட்சியர் சுந்தர்லால், மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.