April 17, 2026
சோழவந்தான் அருகே தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை

சோழவந்தான் அருகே தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முற்றுகை

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை அடிவாரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு தாரைவாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் சார்பில், வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா செய்தியாளர்களிடம் கூறும் போது, மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி நாகமலை அடிவாரத்தில் பட்டியலின மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் விதிமீறல் செய்யப்பட்டு தனியார் ஒருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு அந்த இடத்தில் தனியார் பள்ளி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளி கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும், பஞ்சமி நில ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த வேண்டுமென தலித் விடுதலை இயக்கம் கடந்த 2020ல் கொடுக்கப்பட்ட மனுக்கள் அடிப்படையிலும் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையிலும் மதுரை வருவாய் கோட்டாட்சியர் கடந்த 17. 6 .2021 அன்று வருவாய் துறை ஆவணங்களில் கூறியபடி ஆவணங்களை மாற்ற வேண்டும்.

அதன்படி, தனியார் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக நீதியை பாதுகாக்க கூடிய இந்த அரசு தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தென்கரை கிராமம் மட்டுமல்ல வாடிப்பட்டி வட்டத்தில் 754 ஏக்கர் பஞ்சமி நிலம் இருக்கிறது.

நில உச்சவரம்பு பூமி இருக்கிறது இவ்வாறு பல்வேறு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் தொடர்ந்து, வருவாய்த்துறை மெத்தனம் காட்டி வருகிறது இந்த போக்கை கண்டித்தும் மதுரை வருவாய் கோட்டாட்சியர் 17. 6. 2021 இல் போட்ட உத்தரவின் அடிப்படையில் அதை நடைமுறைப் படுத்தக் கோரியும் 30 தினங்களுக்கு முன்பாக வாடிப்பட்டி வட்டாட்சியருக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தலித் விடுதலை இயக்கத்தின் தலைமையில் பல்வேறு ஜனாதன சக்திகளை ஒருங்கிணைத்து இன்று முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

இதில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக வருவாய்த்துறையும் காவல்துறையும் எங்கள் போராட்டத்தை கண்டு கொள்ளவே இல்லை பட்டியலின மக்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், அலட்சியப்படுத்துகிறது இந்த அரசு இந்த போக்கு நீடிக்குமே ஆனால் தொடர் போராட்டத்தை பல்வேறு ஜனாதன சக்திகளை ஒன்றிணைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை இடம் போராட்டத்தை நடத்துவோம் இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *