April 23, 2026
தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டு இருக்கிறதே, அது என்னவென்று தெரியுமா ?

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டு இருக்கிறதே, அது என்னவென்று தெரியுமா ?

தினசரி நாட்காட்டியில் உள்ள ஒருசில விஷயங்கள் நமக்கு எளிதில் புரிவதில்லை. அதில் மேல் நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்பவை. நாம் அதை பொதுவாக, “மேல்நோக்கு” என்றால் நல்ல நாள் என்றும், “சமநோக்கு” என்றால் சுமாரான நாள் எனவும், “கீழ்நோக்கு” என்றால் கெடுதலான நாளாகவும் எண்ணுகிறோம்.

மேல்நோக்கு நாள்,
கீழ்நோக்கு நாள்,
சமநோக்கு நாள்
இவை மூன்றும் அன்றைய தின நட்சத்திரத்தின் அடிப்படையில்
அமைகின்றன.

நட்சத்திரங்கள் மொத்தம் 27. இவற்றை நம் முன்னோர்கள் ராசி மண்டல அடிப்படையில் மூன்றாகப் பிரித்தனர்.

“ஊர்த்துவமுக” நட்சத்திரம்.
“அதோமுக” நட்சத்திரம்.
“த்ரியமுக” நட்சத்திரம்.

  1. ரோகிணி,
  2. திருவாதிரை,
  3. பூசம்,
  4. உத்திரம்,
  5. உத்திராடம்,
  6. திருவோணம்,
  7. அவிட்டம்,
  8. சதயம்,
  9. உத்திரட்டாதி

ஆகிய ஒன்பதும்
“ஊர்த்துவமுக”
நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் “மேல்நோக்கு நாட்கள்” எனப்படும். மேல்நோக்கி வளர்கின்ற பயிர் களுக்கான விதை விதைத்தல், மரங்களை நடுதல், மேல் நோக்கி எழும் கட்டிடங்கள் (வீடு), உயரமான மதில் சுவர் கட்டுதல் போன்றவற்றை ஆரம்பிக்க உகந்த நாட்கள் ஆகும்.

இரண்டாவதாக,

  1. பரணி,
  2. கிருத்திகை,
  3. ஆயில்யம்,
  4. மகம்,
  5. பூரம்,
  6. விசாகம்,
  7. மூலம்,
  8. பூராடம்,
  9. பூரட்டாதி

ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும்
“அதோமுக” நட்சத்திரங்கள் எனப்படும் .அதாவது, இவை “கீழ்நோக்கு நாள்” எனப்படுகிறது.

இந்த நாட்களில்…
கிணறு வெட்டுதல்,
புதையல் தேடுதல், சுரங்கப் பணிகள், பூமிக்கடியில் வளரும் கிழங்கு வகைச்
செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

மூன்றாவதாக

  1. அஸ்வினி,
  2. மிருகசீரிஷம்,
  3. புனர்பூசம்,
  4. ஹஸ்தம்,
  5. சித்திரை,
  6. சுவாதி,
  7. அனுஷம்,
  8. கேட்டை,
  9. ரேவதி

ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும்
“த்ரியமுக” நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் கொண்ட நாட்கள் “சமநோக்கு” நாட்கள் எனப்படும் இந்த நாட்களில்
வாகனங்கள், கார்,
பைக் வாங்குதல், செல்லப்பிராணிகள்,
ஆடு, மாடு, காளை வாங்குதல்,
சாலை அமைத்தல், வாசற்கால் வைத்தல், வயல்(ஏறு) உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

நமது முன்னோர் பல விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து அனுபவப்
பூர்வமாக விளக்கி வைத்துள்ளனர்.
ஆனால் நாம் அதை சரியாக பயன் படுத்தாமல், அலட்சியமாக விட்டு விட்டோம்.

இதுபோன்ற நல்ல சிறு தகவல்களை நமது சந்ததியினர் களுக்கு எடுத்து உரைத்தால் அவர்களின் தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *