
கல்குவாரி அனுமதி வழங்கியதில் முறைகேடு. தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் தலைமையில் தொழிலாளர்கள் மலைமேல் ஏறி போராட்டம்.
கம்பம். ஆக. 15- தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டியில் அரசு வருவாய் துறைக்கு சொந்தமான கல்குவாரியில் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினருடன், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் குவாரி மலை மேல் ஏறி போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சங்கிலி கரடு பகுதியில்
அரசு வருவாய் துறைக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. பல வருடங்களாக முன்பு தொடர்ந்து செயல்பட்டு வந்த இந்த கல்குவாரியில் ஏலம் உரிமை நிறைவடைந்ததால் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு கிடந்தது. அதனைத் தொடர்ந்து இங்கு பணிபுரிந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல் உடைக்கும் தொழிலாளர்கள் கல்குவாரி செயல்பாட்டில் இல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக கூறி தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக் குழுவினர், கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல் உடைக்கும் தொழிலாளர்கள் சங்கம் மூலம் கல்குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதிச்சீட்டினை வழங்கி கல் உடைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சங்கிலி கரடு பகுதியிலுள்ள மகளிர் குழுக்கள் பெயரில் செயல்பட்டு வந்த கல்குவாரியை, மகளிர் குழுவினருக்கு தராமல், வேறு ஒருவருக்கு உரிமம் வழங்கி உள்ளனர். இதனால் பல வருடங்களாக கல் உடைத்து தொழில் செய்து வாழ்ந்து வந்த தொழிலாளர்களை கல்குவாரிக்குள் அனுமதிக்காதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் டென்டரை ரத்து செய்ய வேண்டும் என்றுகூறி, நேற்று தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் சங்கிலி தலைமையில், கட்சியினர் மற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மலை மேல் ஏறிப் போராட்டம் செய்தனர்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் சங்கிலி கூறுகையில், பல ஆண்டுகளாக குவாரியை நிர்வாகித்து வந்த கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கல் உடைக்கும் உரிமம் தராமல்
எங்கிருந்தோ வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை உடனே ரத்து செய்ய வேண்டும். மேலும் அரசு அனுமதியை மீறி கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்தபடியாக மலையில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
இந்தப் போராட்டத்தில், தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் பரத் குமார், தேனி மாவட்ட தலைவர் ராஜ்குமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மருது ஜி, கம்பம் நகரத் தலைவர் அறிவழகன், கம்பம் நகர செயலாளர் சசி, மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான ஆண் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.






