March 2, 2026
கடை அடைப்பு போராட்டம்

கடை அடைப்பு போராட்டம்

உசிலம்பட்டி.

வைகை அணையிலிருந்து, உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்கும் 58 கிராம கால்வாய்
திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து சோதனை அடிப்படையில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வரும் சூழலில், அணையில் உள்ள மதகு பகுதியை 67 அடியிலிருந்து 65 அடியாக குறைத்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க வேண்டும் என, தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது , வைகை அணை நிரம்பியுள்ள சூழலில் விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தக சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜவுளிகடை பஜார், நகை கடை பஜார், ஐந்துகால் ராந்தல் பகுதி, வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தேனி ரோடு, மதுரை ரோடு, பேரையூர் ரோடு என உசிலம்பட்டியின் முக்கிய பகுதிகளில் உள்ள 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது.

வைகை அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *