
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான நிலத்தை கிரையம் செய்துள்ளார்.
கிரைய ஆவண அடிப்படையில் பட்டா மாறுதல் செய்ய இரண்டு முறை விண்ணப்பித்தும், முறையாக நில அளவையர் கிராம நிர்வாக அலுவலருக்கு விண்ணப்பித்து, பட்டா மாறுதல் செய்ய கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்தும் பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் , சர்வேயர் ஜீவன் ஆகியோரை நேராக சந்தித்து பட்டா மாறுதல் செய்ய தாமதம் செய்ய காரணத்தை கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் ஜீவன் ஆகிய இருவரும் கார்த்திகேயனிடம் எத்தனை முறை பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தாலும் கொடுப்பதை கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்பதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து கடந்த 4ம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த கார்த்திகேயன் நிர்வாக அலுவலரிடம் 3000 ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்க அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை கார்த்திகேயன் தனது செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்து , ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரியிடம் புகார் மனுவுடன் சேர்ந்து கொடுத்துள்ளார். மேலும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ; சாதாரண கூலி வேலை செய்யும் என்னால் பெரிய தொகையை கொடுக்க இயலாது, எனவே முறையாக கிரைய ஆவணத்தின் படி எனக்கு பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதோடு , சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தற்போது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.