
குடிநீர் வீணாகும் அவலம்:
மதுரை,
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய சம்பவம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு தினசரி நகராட்சி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்து வரும் சூழலில், வழக்கம் போல இன்று காலை திறக்கப்பட குடிநீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் தெரு வழியாகவும், சாக்கடை கால்வாயிலும்
ஆறாக ஓடியது.
தெருக்களில் குடிநீர் ஆறாக ஓடியதால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் அவதியுற்றனர்.
தகவலறிந்து, விரைந்து வந்த நகராட்சி பணியாளர்கள் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி வைத்து, உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று, உசிலம்பட்டியின் பல்வேறு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வரும் சூழலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.
நகராட்சி பணியாளர்கள் தினசரி ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனடியாக சரி செய்தால் மட்டுமே பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதே போல மதுரை மாநகராட்சி 37..வந்து வார்டு, தாசில்தார் நகர், வீரவாஞ்சி தெருவில், முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொடுக்கப்பட்ட இணைப்புகளில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, காலையில் குடிநீர் திறந்து விடும்போது, குடிநீர் வீணாகி, சாலையில் செல்கிறது.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர், பொறியாளர்கள் இடம், இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் புகார் செய்தும், குடிநீர் குழாய் உடைப்பை சீர்செய்ய ஆர்வம் காட்டவில்லையாம்.
இது குறித்து, சமூக ஆர்வலர் முத்துராமன் கூறுகையில், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய முதலமைச்சரிடம் தான் புகார் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளதாக தெரிவித்தார்.