June 30, 2025
கந்தர்வகோட்டை அருகே அரசு பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க வாட்டர் பெல் திட்டம் அறிமுகம்.

கந்தர்வகோட்டை அருகே அரசு பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க வாட்டர் பெல் திட்டம் அறிமுகம்.

கந்தர்வகோட்டை ஜீன் 30.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க வாட்டர் பெல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வாட்டர் பெல் திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தண்ணீர் குடிக்க காலை 11 மணிக்கு, மதியம் 1 மணிக்கு மாலை 3 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்படும். மாணவர்கள் வகுப்பறையில் இருந்து தண்ணீர் பருக வேண்டும். வாட்டர் பெல் திட்டம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது அரசு பள்ளிகளில் மாணவர்கள் நலன் சார்ந்து பல்வேறு வகையான திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அத்திட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது வாட்டர் பெல் திட்டம் மாணவர்கள் உடல் நலம் சார்ந்து மிகுந்த பயனுள்ள திட்டமாகும். பள்ளி நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்குவித்தால் மாணவர்கள் வகுப்பறையில் விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க முடியும். மாணவர்களின் நினைவாற்றலும், அறிவாற்றலும் மேம்படும். அவர்களை உற்சாகமாக வைத்திருக்கும் உடலில் நீர்ச்சத்து குறைவதால் தலைவலி மற்றும் உடல் சோர்வுக்கும் முக்கியமான காரணமாகும்.

பள்ளி நேரங்களில் தண்ணீர் குடிப்பதால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் போது அதன் பலன் அதிகமாக காணப்படும் எனவே மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வாட்டர் பெல் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் மற்றும் அனைத்து உயர் அலுவலருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.