June 30, 2025
கொலை குற்றவாளி 28 வருடங்களுக்குப் பின்கைது. குற்றவாளியை பிடிக்க போலீசார் போட்ட நாடகம்.

கொலை குற்றவாளி 28 வருடங்களுக்குப் பின்கைது. குற்றவாளியை பிடிக்க போலீசார் போட்ட நாடகம்.

தமிழக எல்லை குமுளி அருகே 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, தேனி மாவட்டம் வருசநாடு அருகே கேரளா போலீசார் கைது செய்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் நடித்து குற்றவாளியை போலீசார் பிடித்தனர்.

குமுளி அருகே செங்கரையில் சொத்து தகராறு காரணமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 1997 ஜூன் 7 ஆம் தேதி கணேசன் (18) என்பவர் கொலை செய்யப்பட்டார். கணேசனின் மூத்த சகோதரர் லிங்கம், உறவினர்களான தனராஜ், பாலச்சந்தர், மகாதேவன் ஆகியோர் அனைவரும் சேர்ந்து கணேசனை அடித்து, குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில், லிங்கம், தனராஜ், பாலச்சந்தர்,
ஆகியோர் முதல் மூன்று குற்றவாளிகளாக முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். ஆனால், நான்காவது குற்றவாளியான மகாதேவன், சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார். போலீசார்கள் தேடியும் மகா தேவனைப் பற்றி பல ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவரின் மனைவி மூலம் மகாதேவன் தேனி மாவட்டம் வருசநாடு உள்வனப்பகுதியில் தங்கியிருப்பதாக குமுளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மகாதேவனை
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

குமுளி காவல் நிலைய சிவில் போலீஸ் அதிகாரி எம்.மாரியப்பன், வங்கி அதிகாரி போல வேடமிட்டு வருசநாட்டில் பல மாதங்கள் தங்கியிருந்து, விவசாயத்திற்கு லோன் கொடுப்பது போல் ஒவ்வொரு பகுதியாக சென்று மகாதேவன் மறைந்திருக்கும் இடத்தை தேடி வந்தார். அவரது தேடலில், பெரியார் புலிகள் காப்பகத்தோடு ஒட்டியுள்ள, மொபைல் சிக்னல் கூட கிடைக்காத வருசநாட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தர்மராஜபுரத்தில் மகாதேவன் பதுங்கியிருப்பதும், அந்தப் பகுதியில் உள்ள முந்திரி தோட்டங்களில் வேலை செய்து வருவதும், தர்மராஜபுரத்தை விட்டு வெளியில் எங்கும் செல்வதில்லை என்றும் தெரியவந்தது.

இந்த விபரங்களை எல்லாம் சேகரித்த பின்னர், சிவில் போலீஸ் அதிகாரி மாரியப்பன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து குமுளி
எஸ்ஐக்கள் ஜெஃபி ஜார்ஜ், ஆனந்த், சி.பி.ரதீஷ் ஆகியோர்கள் தமிழ்நாடு காவல்துறை, வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் குற்றவாளியை பிடித்தனர்.

கொலை குற்றவாளியை 28 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்ததும், குற்றவாளியை கைது செய்ய போலீசார் மேற்கொண்ட “வங்கி அதிகாரி” நாடக நடவடிக்கையும் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.