
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் பகுதியிலுள்ள சருகனியாற்றின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவரஆஷா அஜித்,தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒக்கூர் பகுதியிலுள்ள சருகனியாற்றின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தொடங்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் , நீர்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில், மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாகவும் வரத்துவாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அரசுடன் இணைந்து நீர்நிலைகளை பாதுகாத்திட ஊர் பொதுமக்கள், தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்து, எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ள வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நீர்நிலைகளை சீரமைக்கும் சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, கடந்த 16.09.2024 அன்று சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட அலவாக்கோட்டை கிராமத்தில், அலவாக்கோட்டை கண்மாய் உபரி நீரிலிருந்து உருவாகி நாமனூர், பெருங்குடி, ஒக்கூர், நகரம்பட்டி மற்றும் பாகனேரி வழியாக செல்லும் சருகனி ஆற்றினை தூர்வாரும் பணியானது அரசுடன் இணைந்து சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி நிறுவனர் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் சீரமைப்பு பணிகள் சிறப்பாக தொடங்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து, இன்றையதினம் ஒக்கூர் ஊராட்சிக்குட்பட்ட வீழனேரி பகுதியிலுள்ள ஒக்கூர் சருகனியாற்று கரையோரங்களில் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கண்ட தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.
அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மட்டுமன்றி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், உறுதுணையாக இருந்திடும் வகையிலும், மேற்கண்ட நன்கொடையாளர்கள் நீர்நிலைகளை பாதுகாத்திட முன்வந்துள்ளது பாராட்டுக்குரியதாகும். இதேபோன்று, மாவட்டத்தில் பாலாறு மற்றும் விருசூழியாற்று பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும், சருகனியாறு சீரமைப்பு பணியின்போது, பல்வேறு நீர்பாசன கால்வாய்கள் கண்டறியப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஆற்றின் வழித்தட பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெருமளவில் பயனடைவர்.
சிவகங்கை மாவட்டத்தினை பசுமை நிறைந்த செழிப்பான மாவட்டமாக உருவாக்கிடும் பொருட்டு, நீர்நிலை சீரமைப்பு பணிகளுடன் ஆற்றின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்று வருகிறது. முன்னதாக, மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களை மீட்டெடுத்து தனியார் பங்களிப்புடன் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக சிறு காடுகள் போன்ற அமைப்பினை ஏற்படுத்துவதன் மூலம், வனவிலங்களிடமிருந்து விவசாயித்தினையும் பாதுகாத்திட முடியும்.
இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் நடும் பணிக்கு உறுதுணையாக இருந்து, தங்களது பங்களிப்பினையும் ஏற்படுத்திடும் பொருட்டு, இந்தோ திபேத் எல்லை காவல் படையினர் (ITBP) மற்றும் சேதுபாஸ்கரா கல்லூரி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளது பாராட்டிற்குரியதாகும்.
இதுபோன்று பல்வேறு பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பேணிக்காப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறாக மரக்கன்றுகள் நடும் பணி நம் எதிர்கால சந்ததியினர்களுக்கான வளமான மற்றும் சுகாதாரமான சமுதாயகத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைகிறது.
மேலும், நீர்நிலை பாதுகாப்பு மற்றும் பசுமை நிறைந்த மாவட்டத்தினை உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்து செயலாற்றி வரும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, வேளாண் பொறியியல் துறை, பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கு எனது பாராட்டுக்களை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்று, பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும் பசுமை நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்தி, சிவகங்கை மாவட்டத்தினை வளமான மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையின் திட்ட இயக்குநர் கா.வானதி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் முத்துராமலிங்கம், முருகன், சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி நிறுவனர் சேது குமணன், கருப்பையா ராமாயி அறக்கட்டளை அறங்காவலர் கே.ஆர்.மணிகண்டன், ஒக்கூர் சேக்கப்ப செட்டியார், நீர் நிலம் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கிருஷ்ணன், வட்டாட்சியர்கள் சிவராமன், தங்கமணி (பேரிடர் மேலாண்மை) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.