
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாயம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட வருவாய் வட்டங்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது.நான்காவது நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 299 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பெரியகுளம் வட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் 36 நபர்களுக்கு பட்டாக்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 50% மானிய விலையில் திரவ உயிரி உரங்கள் 4 விவசாயிகளுக்கும், வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் நான்கு மகாகனி மரக்கன்றுகள் 1 விவசாயிக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ.96,000/- மதிப்பிலான மா அடர்வு மரக்கன்றுகள் 1 நபருக்கும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,000/- மதிப்பிலான தென்னை கன்றுகள் 1 நபருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.1,01,800/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 நபர்களுக்கும், அடையாள அட்டை 2 நபர்களுக்கும் மற்றும் தலா ரூ. 1700 /- மதிப்பிலான 2 ஊன்றுகோல் 1 நபருக்கும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, வட்டாட்சியர்கள் மருதுபாண்டி, சரவணபாபு, பிரதீபா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.