
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்து, அனைவரும் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும். 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் அனைவரையும் துணைத் தேர்வில் பங்கேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் அவர்களது பள்ளியிலேயே சிறப்பு பயிற்சி அளித்து மாணவர்களை தேர்வில் பங்கேற்க செய்து தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் – உயர் கல்வியில் சேர்வதற்கு உயர்கல்வி குறித்த அறிவுரைகளும், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், உதவித்தொகைகள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும்.
மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெற்றோர்களை இழந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி உயர்கல்வியில் சேர்வதற்கு அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இந்திராணி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.