
புதுச்சேரி பொலிவுரு நகரத் திட்டத்தின் (CITIIS) வாயிலாக, உப்பளம் தொகுதியில் வசிக்கும் நலிவுற்ற மக்களுக்கு குடியிருப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
புதுச்சேரி மே-27
புதுச்சேரி பொலிவுரு நகரத் திட்டத்தின் (CITIIS) வாயிலாக, உப்பளம் தொகுதியில் வசிக்கும் நலிவுற்ற மக்களுக்கு குடியிருப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
திமுகவைச் சேர்ந்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியின் முயற்சியின் பயனாக, சுமார் ரூ.8.61 கோடி மதிப்பீட்டில் துப்புராயப்பேட்டையில் வீடற்ற மக்களுக்காக இரண்டு தொகுப்புகள் கொண்ட, 5 மாடிகள் கொண்ட மொத்தம் 80 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்துக்கான பூமி பூசை விழா 2022-ஆம் ஆண்டு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி தலைமையிலும், பொது பணித்துறை அமைச்சர் திரு. லட்சுமி நாராயணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி முன்னிலையிலும் நடைபெற்றது.
இத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் இன்று கழக நிர்வாகிகளுடன் திப்புராயப்பேட்டைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகள் தீவிரமாக நடைபெறுவதையும், மக்கள் விரைவில் பயன்பெறும் வகையில் திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பணிகள் முழுமை பெற இன்னும் 6 மாதங்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கிழக்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் வீடில்லா மீனவர்களுக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டித் தர திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான முதல்வரை விரைவில் சந்திக்க இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தெரிவித்தார்.
உடன் அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் மணிமாறன், தொகுதி துணை செயலாளர் ராஜி, மாநில பிரதிநிதி மணிகண்டன், கிளை செயலாளர்கள் ரவி, ராகேஷ், திப்புராயப்பேட்டை பஞ்சாயத்தார் , கழக சகோதரர்கள் சகாயம், கணேசன், செழியன் யாவரும் உடன் இருந்தனர்.