
தென்கரை பேரூராட்சி தலைவருக்கு "சேவை சுடர்" விருது வழங்கி கெளரவிப்பு
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் விவேகானந்தா நேதாஜி டிரஸ்ட், உலக அமைதிக் குழு, தேனீ கலை இலக்கிய மையம் இணைந்து நடத்தும் சேவை சுடர் விருது வழங்கும் விழா தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இந்து மேலப்பேட்டை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் பொதுமக்களின் சார்பாக வைக்கப்படும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டும், குறிப்பாக அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்து, வார்டு பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, பொது கழிப்பிடம், தெருவிளக்கு, மின் கம்பம் மாற்றியமைத்தல், புதிய ரேஷன் கடை உள்ளிட்ட பணியினை மேற்கொண்டு மக்களின் நலனில் அக்கரை கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைந்து செய்து கொடுத்து, தென்கரை பேரூராட்சி பகுதியை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றிடும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு, மக்கள் போற்றும் தலைவராக, மக்கள் பணியை செவ்வனே செய்து வரும் தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் அவர்களது சிறப்பான மக்கள் சேவையை பாராட்டி “சேவை சுடர்” விருது மற்றும் பாராட்டு கேடயத்தினை காவல்துறை ஐஜி பாரி வழங்கினார். அதனை தொடர்ந்து தென்கரை பேரூராட்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.