
காய்கறிப்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பகுதியில் காய்கறிப்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சி வேளாண் பூச்சியில் துறை, பயிர்பாதுகாப்பு மையம், கோயம்புத்தூர், மற்றும் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து காய்கறிப்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சிகாய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.
இப்பயிற்சியில் முனைவர். செ. சுகன்யா கண்ணா, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் வரவேற்புரை வழங்கி பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். முனைவர் மு. அழகர், உதவி பேராசிரியர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம், கோயம்புத்தூர் காய்கறிப்பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதன் மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் பொறிகள் ஊடுபயிர்கள், உழவியல் முறைகள் இரைவிழுங்கிகள், ஒட்டுண்ணிகள், உயிர்கொல்லிகள் மற்றும் தாவரவியல் பூச்சிக் கொல்லிகள் பற்றி விரிவாக விளக்கினார். காய்கறிப்பயிர்களை தாக்கும் நோய்கள் அதனை கண்டறியும் முறைகள் நோய் உயிர்கொல்லிகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகளையும், பயன்களையும் முனைவர். கி. கல்பனா, இணைப்பேராசிரியர் (நோயியல்) அவர்கள் எடுத்துரைத்தார். முனைவர். சோ. பிரபு, இணைப்பேராசிரியர் (பயிர் நூற்புழுவியல்) நூற்புழுக்கள் தாக்கும் அறிகுறிகள் மற்றும் அதனை உயிரியியல் முறையில் மேலாண்மை செய்வது குறித்து விவரித்தார்.
இதனை தொடர்ந்து வெங்காயம், கத்தரி மற்றும் வெண்டை வயல்களில் ஒட்டும் பொறி மற்றும் இணக்கவர்ச்சி பொறி நிறுவுதல் மற்றும் உயிர்க்கொல்லிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்த செயல் விளக்கங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. நச்சில்லா காய்கறிப்பயிர்களை சாகுபடி செய்வதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பொறிகள், உயிர்க்கொல்லிகள் மற்றும் தாவரவியல் பூச்சிக்கொல்லிகள் இப்பயிற்சியில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தேனி வட்டார கிராம தங்கல் திட்ட
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களும் பங்கேற்று
பயனடைந்தார்கள்.