June 9, 2025
சோழவந்தான் அருகே திருவேடகத்தில் சாலையின்நடுவே சரி செய்யப்படாமல் இருந்த பள்ளத்தில் கதிர் அறுக்கும் இயந்திரம் சிக்கியதால் ஒரு மணி நேர போக்குவரத்து பாதிப்பு

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் சாலையின்நடுவே சரி செய்யப்படாமல் இருந்த பள்ளத்தில் கதிர் அறுக்கும் இயந்திரம் சிக்கியதால் ஒரு மணி நேர போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோவில் செல்லும் மெயின் ரோட்டில் சாலையின் நடுவே ஆறு மாதங்களுக்கு முன்பு இடுப்பளவு பள்ளம் ஏற்பட்டது.

இதனால், அந்த வழியாக மதுரை மாநகராட்சி மற்றும் அவனியாபுரத்திற்கு சென்ற குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகியும் சாலை நடுவே ஏற்பட்ட பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமமும் ஏற்பட்டது இது குறித்து பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை இந்த நிலையில், இன்று காலை சேலத்தில் இருந்து கதிர்அறுக்கும் இயந்திரம் அந்த வழியாக வந்த போது பள்ளம் இருப்பது தெரியாமல் பள்ளத்தில் இறங்கியது.

இதனால், இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . இந்தப் பள்ளத்தை சரி செய்ய நெடுஞ்சாலை துறையினர் பலகட்ட முயற்சிகள் எடுத்தும் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதால் பள்ளத்தை சரி செய்ய முடியவில்லை என, நெடுஞ்சாலை துறையினரும் சாலையின் அடியில் செல்லும் குடிநீர் குழாய் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் எனவும் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குடிநீர் குழாய் எனவும் இரு தரப்பு அதிகாரிகளும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி பணிகளை செய்ய மறுப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது .

ஆகையால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் வைகை குடிநீர் திட்ட அதிகாரிகள் ஆகிய மூன்று துறையைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து இந்த பள்ளத்தை சரி செய்தால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும் என, பொதுமக்கள் கூறுகின்றனர். திருவேடகம் கிராமம் இந்த பகுதியில் முக்கியமான ஆன்மீக தலமாக உள்ள நிலையில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் தினசரி வந்து செல்கின்றனர்.

மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் ஆறு மாதங்களுக்கு மேலாக மூன்று துறை அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக தொடர் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம்ஏற்படும் முன் சாலையை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.