
கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி அம்பி வெங்கடசாமி திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் கருவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பிறந்தது முதல் ஆறுமாதம் வரை தாய்மார்களுக்கும் நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மாதத்தில் 25 நாட்களுக்கு இணைஉணவு வழங்கப்படுகிறது.
மேலும், குழந்தை பிறந்த ஆறுமாதத்திற்கு பிறகு 2 வயது வரை குழந்தைக்கு 125 கிராம் வீதமும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அன்றாடம் உட்கொள்ளும் உணவு வகைகளோடு தினமும் தலா 50 கிராம் வீதம் இணைஉணவு வழங்கப்படுகிறது.
தேனி வட்டாரத்திற்குட்ட 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட 125 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், பெரியகுளம் மற்றும் கடமலை மயிலாடும்பாறை வட்டத்திற்குட்ட 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. சேலை, வளையல், மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம், திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.