
இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அறிக்கை!
உசிலம்பட்டி பகுதியை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்ததை கண்டித்து இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உசிலம்பட்டி பகுதி தமிழகத்தின் பிரபல தலைவர்கள் பலரை உருவாக்கிய பகுதி ஆகும்.
கல்வித்தந்தை ஐயா மூக்கையத்தேவர், பொதுவுடமை சித்தாந்தவாதி கம்யூனிஸ்ட் திரு தா. பாண்டியன், இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, திரைப்பட பிரபலங்கள் ராஜசேகர், பாரதிராஜா இப்படி பலரையும் தமிழகத்திற்கு தந்து பெருமை சேர்க்கும் பகுதி. சுதந்திரப் போராட்ட காலத்திலும் அதற்கு முந்தைய வரலாற்றுக் காலத்திலும் ஒட்டுமொத்த தமிழகத்திற்காக உசிலம்பட்டி மக்கள் பல தியாகங்களை செய்து உள்ளார்கள்ஸ்.
இன்றும் இந்தியா முழுவதும் இட்லி, தோசை கடைகள், மற்றும் முறுக்கு தயாரித்தல், சிறு கடன் கொடுத்து வாங்குதல் இப்படி பாரத நாடு முழுவதும் பரந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
மேலும் உசிலம்பட்டி பகுதியில் சாதி ஏற்ற தாழ்வுகள் கிடையாது. தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் அதாவது பட்டியலின சமூகம் சார்ந்தவர்கள் தான் பூசாரிகளாக உள்ளார்கள். அந்த பூசாரிகள் கொடுக்கும் திருநீற்றை தான் அனைத்து சமூகத்தவரும் வாங்கி நெற்றியில் இட்டுக் கொள்வார்கள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசியல் உள்நோக்கத்துடன் சாதிய மோதல்களை திராவிட மாடல் சாதி வெறியர்கள் உருவாக்க முயற்சித்த போதும் அதற்கு இடம் கொடுக்காமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பகுதி.
வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒரு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த பகுதி மக்கள் மத்தியில் விடுதலை சிறுத்தை கட்சி தொடர்ந்து சாதி வேறுபாடுகளை ஊதி பெரிதுபடுத்தி இப்பகுதியில் தீண்டாமை சுவர் இருப்பதாக கம்யூனிஸ்டுகள் பொய்யான தகவலை கூறினார்கள். அதேபோல பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள் பல பஞ்சாயத்துகளில் தலைவராக உள்ளார்கள்.
ஆனால் ஒரு பஞ்சாயத்தில் தலைவராக வர முடியவில்லை என்று தவறான தகவல்களை பெரிதுபடுத்தி இந்த பகுதி மக்கள் மத்தியில் சாதி மோதல்களை உருவாக்கி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாகத்தான் தற்பொழுது விடுதலை சிறுத்தை கட்சி மீண்டும் சாதிமோதலை உருவாக்குவதற்கு திட்டமிட்டு செயல்படுகிறது. இதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
உசிலம்பட்டி பகுதியில் அமைதியை பாதுகாக்க விடுதலை சிறுத்தை கட்சியை முடக்கி வைக்க வேண்டும். இது குறித்து கருத்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர் திருமிகு சௌத்ரி தேவர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தை கட்சி திமுகவின் கூட்டணி கட்சி என்கிற காரணத்தினால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
உசிலம்பட்டி பகுதி சாதிய வன்கொடுமை பகுதி அல்ல. இது அனைத்து சாதி மக்களும் நல்லிணக்கமாக வாழும் பகுதியாகும். எனவே விசிகவின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து இப்பகுதியில் சமூக நல்லிணக்கத்தை காத்திட வும்,. அதேபோன்று தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சகோதரர் சௌத்ரி தேவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெறும்படி வேண்டுகிறோம்.