
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி அறிக்கை
அறந்தாங்கி,ஜன.25-புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கீழ்காத்தி அருள்மிகு காதமறவர் காளியம்மன் திருக்கோயில் மற்றும் வீரமங்கலம் அருள்மிகு வீரசேகரமுடையார் மற்றும் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்க புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை இறுதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் வீரமங்கலம் கிராமத்தில் உள்ள பட்டா எண்.2, 202, 753 மற்றும் 292ல் 30.01. நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் மேற்படி திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலத்தினை திருக்கோயில் வசம் ஒப்படைக்காவிடில் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் பிரிவு 78-ன் கீழ் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருக்கோயில் செயல் அலுவலர் உத்தரவு அடிப்படையில், மேற்படி நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் தாமாகவே முன் வந்து நிலத்தினை திருக்கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும்.
மீறும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின் படியும் புதுக்கோட்டை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வே.சுரேஷ், புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள் பாதுகாப்பு வட்டாட்சியர் பா.வனிதா தலைமையிலும் திருக்கோயில் செயல் அலுவலர் இரா.முத்துக்குமரன், வீரசேகரமுடையார் மற்றும் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அறங்காவலர் கா.மறவத்தேவர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர்களுடன் அருள்மிகு காதமறவர் காளியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 15.99 ஏ.செ. நிலங்கள் மற்றும் வீரசேகரமுடையார் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 14.02 ஏ.செ நிலங்கள் திருக்கோயில் சுவாதீனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.