
பெண்கள் சாலை மறியல்
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு நீராவி மேட்டுத் தெரு ஊரணியிலிருந்து உபரி நீர் செல்ல வழி இல்லாத நிலை நீடித்து வருகிறது.

இதனால், குடியிருப்பு பகுதியில் உபரிநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் சூழல் நீடித்து வருவதாகவும், ஊரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரி நீர் செல்ல வழிவகை செய்ய கோரி நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில் சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.