
கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டைகள் குப்பையில்! பொதுமக்கள் அதிர்ச்சி!
ஜனவரி : 23, பழனி :
தமிழக முன்னாள் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கம் தகுதியான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தரமான சிகிச்சை பெற்று பயனடைய வேண்டும் என்பதே ஆகும்.
இத்திட்டமானது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வருகிற 2027 ஆம் ஆண்டு வரை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் தோராயமாக இரண்டு கோடி பேர் வரை இணைந்துள்ள நிலையில் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் அட்டைகள் குப்பையில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழனி வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தினமும் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்தக் குப்பைகளோடு குப்பைகளாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வீசப்பட்டிருந்தன.
மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வாங்குவது எப்படி என தெரியாமல் பெரும்பாலான பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மருத்துவ காப்பீடு அட்டைகள் அனைத்தும் குப்பைகளில் வீசி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது குடும்ப அட்டை எங்களை வைத்து ஆன்லைனிலேயே காப்பீட்டு அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி உள்ளது.
இருப்பினும் அவற்றை பொதுமக்கள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ள நிலையில் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை அதிகாரிகள் அலட்சியமாக குப்பையில் வீசி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குப்பைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டைகளை பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் குப்பையில் வீசப்பட்டது குறித்து விசாரிப்பதாக வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.