
சைக்கிளில் சென்று, சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, நெல்லை மாநகராட்சி மேயர்!
நெல்லை மாநகராட்சி, திருநெல்வேலி மண்டலம், 25-வது வார்டு, லாலா சத்திரம் முக்கில் இருந்து, திருநெல்வேலி நயினார்குளம் செல்லும் பிரதான வாய்க்காலில், குப்பைக்கூளங்கள் மற்றும் அமலைச்செடிகள் போன்றவற்றால், சீரான நீரோட்டம் இல்லாமல் உள்ளது. இதனை கருத்திற்கொண்டு, ஜேசிபி இயந்திரம் மூலம், அந்த வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணிகள் மற்றும் நெல்லை டவுன் வடக்கு ரத வீதியில் உள்ள பிரதான கழிவுநீர் ஓடையினை சுத்தப்படுத்தும் பணிகள் ஆகியன, அதிகாலையில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த சீரமைப்பு பணிகளை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், சைக்கிளில் சென்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாகவும், துப்புரவாகவும் விரைந்து முடிக்குமாறு, பணியாளர்களை மேயர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது, பேட்டை இ.எஸ்.இ அலி, 25-வது வார்டு திமுக செயலாளர் அருள் என்ற சுந்தர்ராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின், திருநெல்வேலி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி,வார்டு பிரதிநிதி சேகு பிள்ளை, மாநில பேச்சாளர் “பாம்பு” கிருஷ்ணன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பெருமாள் சுகாதார மேற்பார்வையாளர் சிவ குமார் ஆகியோர், உடனிருந்தனர்.