
மடத்துக்குளத்தில் களம் காணும் சி.சண்முகவேலு: கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடைசூழ மனுத்தாக்கல்!
மடத்துக்குளம் | ஏப்ரல் 04:
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (AMMK) வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு இன்று தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.
ஆதரவாளர்கள் புடைசூழ வருகை ;
இன்று காலை மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த சி.சண்முகவேலு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது மனுவை சமர்ப்பித்தார். வேட்புமனு தாக்கலின் போது கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உற்சாகத்துடன் உடன் வந்திருந்தனர்.
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு ;
இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான, அதிமுக (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.மகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி அளவிலான முக்கிய நிர்வாகிகள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் சி.சண்முகவேலு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடியாரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவோம் என உறுதியளித்தார். பின்னர் பேசிய அக்கட்சியின் ஆதரவாளர்கள், தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு அவர்களின் அனுபவமும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலமும் தங்களுக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.






