March 2, 2026
கடைகளை நவீனப்படுத்த கோரிக்கை

கடைகளை நவீனப்படுத்த கோரிக்கை

உசிலம்பட்டி. நவம்பர் : 29

மதுரை, உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திடமிருந்து, நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இடத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட கடைகளை நவீன படுத்தி நகராட்சிக்கு வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக சுமார் 7 ஏக்கர் 80 சென்ட் இடம் இருந்தது, இந்த இடத்தில் உசிலம்பட்டி தினசரி சந்தை, பூக்கடைகள், தரை வாடகை கடைகள், வணிக வளாக கடைகள் என சுமார் 600 க்கும் அதிகமான கடைகள் இயங்கி வந்தன.

இந்நிலையில், உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஊராட்சி ஒன்றிய இடத்தை தேர்வு செய்து, இடத்தை பெற்று தர அரசுக்கும், இரு நிர்வாகத் தலைமைக்கும் கோரிக்கை வைத்த சூழலில், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக இருந்த 7 ஏக்கர் 80 சென்ட் இடத்தை முழுவதுமாக நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க அரசு ஒப்புதல் அளித்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஒரு ஏக்கர் நிலம் போக, மீதமுள்ள இடத்தில் உள்ள 600 க்கும் மேற்பட்ட கடைகளை 100 ஆண்டுகள் பழமையான கட்டமைப்புடன் அப்படியே வைத்துக் கொண்டு, வாடகையை வசூல் செய்ய கடந்த நகர் மன்ற உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடைகளை நவீன படுத்த கோரி அனைத்து கவுன்சிலர்களும் புறக்கணித்து தீர்மானத்தை ரத்து செய்தனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் இணைந்து 600 கடைகளையும், வணிக வளாக கடைகளாக நவீன படுத்தி, ஏற்கனவே பயன்படுத்தி வரும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு முன்னுரிமையுடன் கடைகளை வழங்கி வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி ஆணையாளர் இளவரசு-விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *