
அடிப்படை வசதிகள் கோரி, சாலை மறியல்..!
உசிலம்பட்டி:
மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில், நகர் மன்ற உறுப்பினர் வார்டு பகுதியில் முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காததைக் கண்டித்து, நகர் மன்ற உறுப்பினர் தலைமையில் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு பகுதியில்,
500 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த வார்டு பகுதியில், முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், சாக்கடை கழிவுநீர் மற்றும் மழை காலங்களில் மழைநீர் செல்லவும் வழியின்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த வார்டில் உள்ள குறைகளை சரி செய்ய கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கைகளும் இல்லை எனவும், கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என, குற்றம் சாட்டி, நகர் மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் அப்பகுதி மக்கள், இணைந்து உசிலம்பட்டி பேரையூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து, விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
மேலும், சாலை மறியல் முடியும் வரை நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும், மறியல் செய்ய போகிறேன் என தெரிவித்தும் அலட்சியமாக செயல்படுவதாக நகர் மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டுவதோடு, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார்.






