March 2, 2026
விஜய் அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா ? அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து

விஜய் அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா ? அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து

நாகர்கோவில் செப் 01
விஜயின் அரசியல் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தவெகா வின் அரசியல் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேற்கொண்டு கூறியதாவது :-
திரைப்பட துறையில் இருந்து தமிழகத்திற்கு கிடைத்திருக்கிற புதிய வரவு விஜய் எனலாம். இவர் தவெக கட்சியை தொடங்கிய சில காலங்களிலேயே ஆட்சி மாற்றம், அதிகார பகிர்வுக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார். கனவு காண்பதில் ஒன்றும் தப்பில்லை. கனவு நிஜமாக கூட ஆகலாம். அதற்கு கொள்கை நிலைப்பாடு, தன்னம்பிக்கை, முயற்சி ,உத்வேகம் வேண்டும் .மக்களை அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருக்க வேண்டும்.

சினிமா அரசியல் ஒன்றும் தோற்றுப் போனதில்லை. அண்ணாவும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர் தான் .அதே போன்று எம்ஜிஆர் திரைப்பட துறையை சேர்ந்தவர் தான். அந்த வரிசையில் விஜய் அரசியலில் முன்வர விருப்பமடைகிறார். அதற்காக அண்ணா, எம்ஜிஆரை கொள்கை தலைவராக அறிவித்திருக்கிறார்.

திரைப்பட துறையிலிருந்து வெளிவந்தவர் தான் ஜெயலலிதா. அவரின் மறைவிற்குப் பிறகு வெற்றிடம் இருப்பதாக கருதி நடிகர் ரஜினிகாந்தும் அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். கட்சிப் பெயரை அறிவிக்காமலே மீண்டும் திரைப்படத் துறைக்கே போய் விட்டார். இது சமீபத்திய வரலாறு.

இந்த பிம்பத்தை உடைத்திடும் வகையில் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியுள்ளார் .இரண்டு மாநாடுகளை இதுவரையிலும் நடத்தி , அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவருடைய மாநாட்டிற்கு வந்திருந்த கூட்டத்தைப் போல் இனிமேல் எந்த நடிகருக்கும் கூட்டம் சேருமா என்பது கேள்விக்குறி தான்.
அரசியல் களத்தில் எந்த கட்சியையும் சாராமல் ஒற்றை மனிதனாக நின்று கூட்டத்தை கூட்டி சாதித்தும் இருக்கிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் தனி மனிதராக நின்று வாக்குகளை வாங்க முடியுமா? என்பது தான் எல்லோர் மனதிலும் எழுகிற கேள்வியாக இருக்கும்.
அண்ணா அவர்கள் பெரியாரின் வழித்தோன்றதலால் உருவெடுத்த தலைவர் .எம்ஜிஆர்ரோ, அண்ணா, கருணாநிதி போன்றவர்களுடன் நெருக்கமுற்று, கட்சிக்காக உழைத்து, பின்பு அதிமுகவை தொடங்கியவர்.

1949 ஆம் ஆண்டு திமுக வை தொடங்கிய அண்ணா, ஆட்சியை பிடிக்க கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆனது. இந்தி எதிர்ப்பு, தனி தமிழ்நாடு கோரிக்கைகளை முன்னிறுத்தி பல போராட்டங்கள் நடத்திய பிறகும் கூட, அந்த தேர்தலில் போட்டியிட்ட அண்ணா தோற்று போனார். அதன் பின்பு திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினரானார். பின்னர் 1967-ல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தார்.

அவர் வழி வந்த எம்ஜிஆர்ரோ 1972- ல் அதிமுகவை தொடங்கினார். கருணாநிதியை முதலில் முதலமைச்சர் ஆவதற்கு ஆயத்த வேலைகள் செய்தவர் எம்ஜிஆர். கருணாநிதி திமுக தலைவராவதற்கு வழி வகுத்து கொடுத்தவர் எம்ஜிஆர். கட்சி தொடங்கிய காலத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தி திமுகவை பின்னுக்கு தள்ளிவர் எம்ஜிஆர். அதன்பின்பு எம்ஜிஆர் பலதரப்பட்ட மக்களை தன் பக்கம் இழுத்து, ஓயாது உழைத்து வெற்றியும் கண்டார்.

இந்த அரசியலை விஜய் கூர்ந்து பார்க்க வேண்டும். கூட்டணி வைத்து தான் எம்ஜிஆரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார். விஜய் முன்பு எந்த கட்சியை சாராதவராக இருந்தாலும், விஜயிக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு இருக்கதான் செய்கிறது. விஜய் கட்சி தொடங்கிய பிறகு எம்ஜிஆரை போன்று ஒரு வாய்ப்பு கிடைக்கத் தான் செய்தது. அதை அவர் நழுவ விட்டுவிட்டார். மனப்பயத்தால் தான் விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட வில்லை போலும். விக்கிரவாண்டி முதல் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை போன்ற மறைந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த விஜய், பெரியாரின் மண்ணில் ( ஈரோடு கிழக்கு) இடைத்தேர்தல் வந்தப்போது போது போட்டியிட்டிருக்க வேண்டுமா? வேண்டாமா? தனது முழு பலத்தையும் காட்டி தனது அரசியல் அடையாளத்தையும் காட்டியிருந்தால், அரசியல் களத்தில் நிச்சயம் பேசும் பொருளாகியிருப்பார். என்னை சினிமா காரன், கூத்தாடி என்று நினைக்க வேண்டாம் என்று பரப்புரை ஆற்றுகிறார் விஜய். சரியான அரசியல் வியூகங்களை வகுத்து கொள்ளவில்லை என்கிற குறைபாடு விஜயிடம் இருக்கத் தான் செய்கிறது.

இன்னமும் சொல்லப்போனால் மதுரை மாநாட்டில் விஜய்காந்தை அண்ணன் என்று அழைத்தீர்கள். ஆனால் அதேசமயம் மாநாட்டில் பிரேமலதாவை அழைத்து பிரகடனப் படுத்தியிருந்தால் நடக்கிற அரசியலே வேறு. இந்த அரசியல் எல்லாம் விஜயிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் பயிற்சி பட்டறையில் போதிய அனுபவம் இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது. இது இருக்கட்டும். எம்ஜிஆருக்கு நெடுஞ்செழியன், ஆர். எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் நெருக்கமாக இருந்த இரண்டாம் கட்ட தலைவர்களை போன்று, விஜய் கட்சியில் , அரசியலில் பெயர் சொல்லும் அனுபவ தலைவர்கள் யாரும் இன்னமும் இடம் பெறவில்லை. தற்போது தவெக வில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லோருமே பயிற்சி தலைவர்களாகவே தெரிகிறார்கள். விஜய்யை நம்பி பிறக் கட்சிகளிலிருந்து பெருந் தலைவர்கள் வர காத்திருக்கிறார்கள். அவர்களை தன் கட்சியில் இழுக்க விஜய் பயப்படுகிறார் என்றே தெரிகிறது. இந்த வேலையை செய்யாவிட்டால் விஜயின் தன்னம்பிக்கை எப்படியிருக்கிறது என்ன என்பது புரிகிறது.

மக்களை சந்தித்து அரசியலை நடத்தினார் விஜயகாந்த்.2005- ல் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி வைத்த பின்னரே எதிர்கட்சித் தலைவரனார். அதன்பின்பு விஜயகாந்த் அவரது தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில் படுதோல்வியை கண்டார். இதுவெல்லாம் அரசியல் வரலாறு. எனவே விஜயிக்கு நாம் சொல்வது என்னவென்றால், விஜய்யை நம்பி பெருங்கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம் ஒரு தேர்தலோடு நின்று விடக்கூடாது. எந்த ஒரு ஆட்சியையும், தமிழகத்தில் கொண்டு வருவதற்கும், அதே வேளையில் வீழ்த்துவதற்கும் உரிய சக்தி விஜயிடம் இருக்கத் தான் செய்கிறது. முறையாக கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் போட்டியிட்டால் மட்டுமே தமிழக அரசியிலில் நீடிக்க முடியும். தனி மரம் தோப்பாகாது என்பதை விஜய் புரிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

சி.முத்துகுமார்,

நிறுவனர், அகில இந்திய தமிழர் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *