
2026- தேர்தலில் மீனவர்களின் வாக்குகள் திமுக-வுக்கு கிடைக்குமா ?
தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
சுசீந்திரம் ஜுன் 03
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைப்பெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் மீனவர்களின் வாக்குகள் திமுக பக்கம் விழுமா என்பது கேள்விக்குறி தான் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவரும், பத்திரிகையாளருமான முத்துக்குமார் தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் வாக்குகளை குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் கணிப்புகள் இப்போதே வர தொடங்கி விட்டன. பெரும்பாலானோர் திமுகவே மீண்டும் அமைக்கும் என்று சொல்லுகிறார்கள்.இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளும் அடுத்த ஆட்சி மீண்டும் திமுக தான் என்று ஆரூடம் சொல்லியிருக்கின்றன. திமுக தலைவர் கூட பொதுக்குழுவில் பேசும் போது, 2026 தேர்தல் முடிவில் வர இருக்கும் தலைப்பு செய்தி என்னவென்றால், மீண்டும் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்று தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்லி விட்டார்.
ஆக அடுத்த ஆட்சி திமுக தான் என்கிற நிலையில் உடன்பிறப்புகள் மார்தட்ட ஆரமம்பித்து விட்டார்கள்.
இருந்தாலும் திமுக அறிவித்துள்ள நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர் கூட மீனவரில்லை என்பது தான் மனக்கஷ்டமாக இருக்கிறது. மீனவர்கள் மத்தியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. கடல் தொழில் செய்து பிழைப்பு நடத்த நாதியற்றவர்களாக இருக்கிறார்கள். மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதிலும் சிக்கல், கடலோரத்தில் வாழ்வதிலும் சிக்கல். இப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீனவர் ஒருவருக்கு கொடுக்க மீனவர் அமைப்புக்கள் திமுக வை வலியுறுத்தியது.
ஆனால் திமுக வினரோ மீனவர்கள் மத்தியில் சமரச முயற்சியில் இறங்கி மீனவர் சிலருக்கு கட்சிப்பதவிகளை வழங்கி சரி செய்துள்ளார்கள்.இருந்தாலும் மீனவர் மத்தியில் சலிப்பு தன்மை உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மீனவர் இனத்தை சேர்ந்த வலம்புரி ஜான் ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் தாய் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். ஜேப்பியார் குடிநீர் வாரிய தலைவர், அரசு கொறடா வாக இருந்துள்ளார். ஜி.ஆர்.எட்மண்ட் உணவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.
ஆனால் திமுகவில் பெயர் சொல்கிற அளவுக்கு யாரும் இல்லை. ஜெனிபர் சந்திரன் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். கடைசியில் அவர் அதிமுக வில் ஐக்கியமாகி விட்டார்.
கே.பி.பி சாமி மீன்வளத்துறை அமச்சராக இருந்தார். இப்போது அவரது சகோதரர் சங்கர் மட்டும் எம்.எல்.ஏ யாக உள்ளார். அவ்வளவுதான்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 சட்டமன்றத் தொகுதிகளில் மீனவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. அதுவும் மத ரீதியாக மீனவர்கள் பிரிந்து இருப்பதால், பாதிரியார் குருக்கள், மத தலைவர்களை திமுக தன் வசம் வைத்துள்ளது. பாதிரியார் தலைவர்களை வைத்து மீனவர்களின் வாக்குகளை தன் வசப் படுத்தி விடலாம் என்று திமுக தப்பு கணக்கு போட்டு கொண்டிருக்கிறது. தற்போது மத தலைவர்களும் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். திமுகவில் மீனவ பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லை என்பதை மத தலைவர்கள் புரிந்து கொண்டதால் வரும் தேர்தலில் மீனவர்களின் வாக்குகள் திமுக பக்கம் விழுமா என்பது சந்தேகம் தான் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.