
பெரியகுளம் அருகே திரவியம் கல்லூரியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள திரவியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திரவியம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர்.பாண்டியராஜ், செயலாளர் டாக்டர்.ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர்.
திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ரீனா வரவேற்புரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் ஜெகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் உயர் கல்வியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார்.
அதனை தொடர்ந்து பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் இடத்தை பெற்றவர்களுக்கு திரவியம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மருத்துவர்.பாண்டியராஜ், செயலாளர் மருத்துவர்.ஹேமலதா பாண்டியராஜ் அவர்களும் இரண்டாம் இடத்தை பெற்றவர்களுக்கு விஜய்டிவி புகழ் கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் ஜெகன் அவர்களும், மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு திரவியம் கல்வி நிறுவனங்களின் அருட் சகோதரிகள் அக்சிலியா ஆண்டனி, ரோஜா மணி, மேரிகுட்டி சாகோ ஆகியோர் மாணவியர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினர்.
இதில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராமதிலகம் நன்றியுரையாற்றினார்.