
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி): ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு வழங்கல்
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜமாபந்தி) வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்சித் சிங் தலைமை வகித்தார்.
உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், தாசில்தார் மருதுபாண்டி முன்னிலை வகித்தார். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது நேற்று மே 22ஆம் தேதி தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்நிலையில் நேற்று கெங்குவார்பட்டி, தே.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டாக்கள், இலவச வீட்டு மனை பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதன் பின்னர் தீர்வு பெற்ற மனுக்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வருவாய்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.