
நிலக்கோட்டை, மே 23-
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி முன்னிலை வைத்தார்.
ஜமாபந்தியில் நிலக்கோட்டை, நூத்துலாபுரம்,பச்ச மலையான்கோட்டை, கோட்டூர்,நரியூத்து, கோடாங்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களிடமிருந்து பட்டா மாறுதல்,வாரிசுச் சான்று, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மனுக்கள் பெறப்பட்டது. இதில் வத்தலகுண்டு, உசிலம்பட்டி, நிலக்கோட்டை,மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உசிலம்பட்டி கள்ளர் கல்விக் கழக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சுமார் 50 பேர்கள் திரண்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் ஜமாபந்தியில் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது நிலக்கோட்டை தாலுகா வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் அமைந்துள்ள அரசு கள்ளர் மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் புதிய சமுதாயக் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு கள்ளர் மாணவர்கள் விடுதி இடத்தை தாலுகா வருவாய் அதிகாரிகள் மற்றும் நில அளவையர்கள் சென்று அளந்து உள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உசிலம்பட்டி கள்ளர் கல்விக் கழக நிர்வாகிகளும் தடுத்து நிறுத்தியதாகவும் தொடர்ந்து இதுகுறித்து மேற் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தவறுதலாக அரசு புறம்போக்காக வைத்துள்ளதை உசிலம்பட்டி கள்ளர் கல்விக் கழகம் என்ற பெயரில் பட்டா வழங்க கோரியும் மனு கொடுத்தனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் உரிய முறையில் அளந்து பத்திரத்தில் என்ன அளவு இருக்கிறதோ அதுப்படி உங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதால் அங்கிருந்த கள்ளர் கல்விக் கழகத்தினர் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.