
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவதாக மாநில சங்கத் தலைவர் அறிக்கை
தமிழக முழுவதும் கிராம ஊராட்சி செயலாளர்கள் 3 கட்ட போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் பதிவரை எழுத்தர்களுக்கு வழங்கப்படும், அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும். இதனை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக 3 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக வருகிற 12-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களும் ஒரு நாள் மாநில அளவில் தற்செயல் விடுப்பு எடுத்து அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதனைத் தொடர்ந்து 2ம் கட்டமாக ஏப்ரல் 4ம் தேதி அனைத்து ஊராட்சி செயலாளர்களும், சென்னை ஊரக வளர்ச்சி ஆணையரகத்தில் பெருவிரல் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்த உள்ளோம். 3ம் கட்டமாக ஏப்ரல் 21ஆம் தேதி முதல் சென்னை ஊரக வளர்ச்சித் துறை ஆணாயிரகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களும் இந்த ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் மூன்று கட்ட போராட்டங்களிலும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வெளியிட்ட போது உடன் மாநில இணை செயலாளர் விஜய கர்ண பாண்டி, மாவட்டத் தலைவர் பாண்டியராஜன், உட்பட சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.