
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில், கட்டணமில்லா பேட்டரி வாகனத்தை, இயக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திங்கட்கிழமை தோறும் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களில் நடைபெற்று வரும், “மக்கள் குறை தீர்க்கும் முகாம்”, இன்று [நவ.25] திருநெல்வேலியிலும் நடைபெற்றது. கொக்கிரகுளம் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்ற இந்த முகாம் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்து, மனுக்களை பதிவு செய்து, அவற்றிற்கு ஒப்புதல் சீட்டு வழங்கிடுமாறு, அதிகாரிகளை பணித்தார். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மனுக்களில், குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகளின் தன்மைக்கேற்ப, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், ஒப்படைக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் அல்லது பொதுப்பிரச்சனைகள் அடங்கிய மனுக்களை, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைக்கும் வகையிலும், வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். இந்த முகாமின் போது, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், கொக்கிரகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, எளிதில் வந்து செல்லும் வகையில், 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, பேட்டரி வாகனத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் இயக்கி வைத்து, அதன் செயல்பாடுகளை கண்டறிந்தார். இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.