
உடுமலை திருமூர்த்திமலை, அமராவதி செல்லும் சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி!
உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை,அமராவதி, சுற்றுப்புற கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த சாலையில் போடிபட்டியை அடுத்த அண்ணா நகர் அருகே தண்ணீர் தேங்கி வருகிறது.இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கு உடுமலை- திருமூர்த்திமலை சாலை பிரதானமாகும்.இதனால் போக்குவரத்து நெருக்கம் அதிகளவில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் அண்ணாநகர் அருகே சாலையில் தண்ணீர் தேங்கி வருவது தொடர் கதையாக உள்ளது.அப்போது பாதி அளவு சாலையை தண்ணீர் ஆக்கிரமித்து விடுவதால் வாகனங்கள் விலகிச் செல்லும் போது விபத்துக்கள் நேரிடும் சூழல் நிலவுகிறது. உடுமலை பிஏபி கால்வாயில் ஏற்படுகின்ற நீர்க்கசிவே இந்த நிகழ்வுக்கு காரணமாகும்.அதை சீரமைக்க முன்வராததால் மாதக்கணக்கில் தண்ணீர் சாலையில் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக சாலையும் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து விவரம் தெரிந்தும் அதிகாரிகள் கால்வாயின் உடைப்பை சீரமைப்பதற்கு முன்வரவில்லை.இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே அண்ணாநகர் அருகே பிஏபி கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை முழுமையாக கட்டுப்படுத்தி சாலையில் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.