
திருப்பரங்குன்றத்தில் இன்று சக்தி வேல் வாங்கும் விழா..
மதுரை.
சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக சக்திவேல் வாங்கும் விழா நடைபெறுகிறது.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக இன்று
திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து
சக்திவேல் பெற்றார்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது.
கந்த சஷ்டி விழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி மிளகு துளசி, பால் உள்ளிட்டவைகளை ஒரு வேளை மட்டுமேசாப்பிட்டு கடும் விரதம் இருந்து வருகிறார்கள்.
பக்தர்கள் அனைவரும் கோவிலிலே தங்கி இருந்து தினமும் இரு வேளை சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வந்து முருகப்பெருமானை வழிப்பட்டு வருகிறார்கள்.
திருவிழாவையொட்டி, தினமும் ஒரு வேளை (காலையில்) யாகசாலை பூஜையும், காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்குமாக தினமும் இரு வேளை சண்முகார்ச்சனையும், தினமும் இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி -தந்ததொட்டி விடையாற்றி சப்பரத்தில் அமர்ந்து திருவாட்சி மண்டபத்தினை 6 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (26ந் தேதிஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் கோவிலுக்குள் ஆலய பணியாளர்கள் திருக்கண் மண்டபத்தில் கோவர்த்தன அம்பிகையிடம் இருந்து முருகன் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக சூரபத்மனை வெல்லுவதற்காக சத்திய கிரிஸ்வரர் முன்னிலையில் முருகப் பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் பெறும் நிகழ்ச்சியாக “வேல் வாங்குதல்”கோலாகலமாக நடைபெற்றது.
இதனையொட்டி அங்கு ஏராளமாக பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை (27-ந்தேதி திங்கட்கிழமை) மாலை 6 மணியளவில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் அருகே சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம் கேள்வி நிகழ்வில் மதுரை மட்டுமல்லாது பிற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.
நாளை மறுநாள்28-ந்தேதி காலையில் கிரிவலப்பாதையில் சட்டத் தேர் பவனியும், மாலையில் பாவாடை தரிசனமும், கருவறையில் முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அலங்காரமும் நடைபெறுகிறது .
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா
பாலாஜி, கோவில் துணை ஆணையர் சூரிய நாரயணன், அறங்காவலர்கள் வ.. சண்முகசுந்தரம். நா. மணிச்செல்வன் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இதே போல, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை மூலநாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று மாலை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து அம்பாளிடமிருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிர்வேட்டுக்கள் மேளதாளங்கள் முழங்க பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது.
தொடர்ந்து, திங்கட்கிழமை மாலை சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திருக்கோவில் முன்பாக நடைபெறுகிறது.






