June 28, 2025
நகராட்சி ஊழியரை ஜாதி பெயரைச் சொல்லித் திட்டிய திமுக நகர செயலாளர்

நகராட்சி ஊழியரை ஜாதி பெயரைச் சொல்லித் திட்டிய திமுக நகர செயலாளர்

தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார ஆய்வாளரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்த தேனி வடக்கு நகர திமுக செயலாளரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ள சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தேனி. ஜூன்.27

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நா.ராமசாமி. பட்டியலினத்தை சேர்ந்த இவர், தன்னை ஆளும் திமுகவை சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியாவின் கணவரும், அல்லிநகரம் நகராட்சி 20வது வார்டு கவுன்சிலருமான பாலமுருகன் என்பவர் தன்னை ஜாதிப் பெயரைச் சொல்லி, திட்டி, அடிக்க முற்பட்டு கொலை மிரட்டல் விடுத்தார், அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இவர் அளித்த புகார் மனுவில், ஜூன் 24ம் தேதி நகராட்சி ஆணையாளர் அவர்களுடன் வரி வசூல் பணியில் இருந்தபோது பாலமுருகன் எனக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாரஸ்ட் ரோட்டில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு உடனே வரும்படி அழைத்தார். ஆணையாளரிடம் சொல்லிவிட்டு நான் அங்கு சென்ற போது பாலமுருகன் என்னிடம், தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் இருக்கிற இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை எடுக்கச் சொல்லி தீர்மானம் போட்டு 6 மாசம் ஆயிருச்சு, இன்னும் எதுக்கு எடுக்கலை என கேட்டார். இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் இன்னும் எடுக்கவில்லை, மேலும் நகர் மன்ற துணைத் தலைவர், நகர் மன்ற தலைவரிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் என்று நான் கூறியவுடன், பாலமுருகன் நீயும், அவனும் (நகராட்சி ஆணையாளரும்) நான் சொல்வதை கேட்க மாட்டீர்களா என ஒருமையில் ஜாதிப் பெயரைச் சொல்லி அருவருப்பான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எனவே திமுக நிர்வாகி பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேனி நகர் காவல் துறையினர் திமுக நிர்வாகி பாலமுருகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலமுருகன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தந்தால் திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் திமுக தலைமை தேனி வடக்கு நகர பொறுப்பாளராக நியமனம் செய்தனர். சமூக நீதி பேசும் திமுகவில் பொறுப்பிலிருந்து கொண்டு ஜாதிய வன்மத்தை கட்டவிழ்த்து விடும் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா கணவர் பாலமுருகன் மீது அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்குமா என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஜெகநாதன் கூறுகையில், சமூக நீதி பற்றி வாய்கிழிய பேசும் திமுகவின் தேனி நகராட்சி சேர்மன் ரேணுபிரியாவின் கணவர் பாலமுருகன் நகராட்சி ஊழியரை சாதியைச் சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் தேனி காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் புகார் மனு அளித்தும், இதுவரையிலும் வழக்கு பதிவு செய்யப்படாமல் அவரை சமரசம் செய்வதற்கான கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. இதனால் நகராட்சி சக ஊழியர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
சக ஊழியர்கள் மத்தியில் சாதியை சொல்லித் திட்டிய சம்பவம் பட்டியல் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட நபரை வேலையை விட்டு நீக்கி விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் மனுவுக்கு முதல் தகவல் அறிக்கையை (FIR) வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.