
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி காவல்துறை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி:
உசிலம்பட்டி:
ஜூன் 26 ஆம் தேதியான இன்று சர்வதேச போதை பொருட்கள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் போதை பொருட்களை ஒழிக்கவும், போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சரக காவல்துறை மற்றும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணிகள் குழுவினர் இணைந்து போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து துவங்கிய இந்த பேரணியை,
உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
மதுரை ரோடு, தேவர் சிலை வழியாக முருகன் கோவிலுக்கு வந்து நிறைவடைந்த இந்த பேரணியின் முடிவில், போதை பொருட்களை ஒழிப்பது மற்றும் தங்கள் குடும்பத்தினரையும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடாது பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.