
மதுரை கூடல் நகர் அருகே சொகுசு கார் தீவிபத்து
மதுரை.
மதுரை கூடல் நகர் பேருந்து நிலையம் அருகே சொகுசு கார் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சொந்தமான காரை, ஹேமந்த் குமார் என்ற நபர் ஓட்டிச் சென்றார். கூடல் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, காரில் இருந்து திடீரென புகை வெளியானது.

அதிர்ச்சியடைந்த ஹேமந்த் குமார் உடனடியாக காரில் இருந்து வெளியேறினார். பின்னர், காரின் முன்பகுதியில் மளமளவென தீ பரவியது. இதில், காரின் முன்பகுதி தீயில் பரிதாபமாக எரிந்து சேதமடைந்தது. சம்பவம் குறித்து, தகவல் அறிந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். தீவிபத்து குறித்து,
கூடல் புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






