
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில அதிகாரிகள் கூட்டம்
தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு, இரு மாநில அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் இன்று கம்பத்தில் நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், குடிமைப் பொருள் வழங்கல் சி.ஐ.டி அதிகாரிகள் மற்றும் கேரள மாநில குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகள் ஆகியோருக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட வழங்கல் அதிகாரி மாரிச்செல்வி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளையும் பலப்படுத்துதல், தமிழக எல்லை சோதனை சாவடியில் சோதனையை தீவிர படுத்தவும், தொலைபேசி எண்கள், சந்தேகப்படும் வாகனங்கள் மற்றும் நபர்கள் உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுதல், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் கூட்டாக சோதனை நடத்தும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்தல், தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்யவும், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பிடியாணை நிறைவேற்றவும் இரு மாநில அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல், ரேஷன் அரிசி போன்றவற்றை பெறுபவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநில எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். எனவே, ரேஷன் அரிசி வாங்குபவர்களின் முழு விவரங்களையும் சேகரித்து, அவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறைக்கு உதவ கேரளா அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது
கூட்டத்தில் திண்டுக்கல் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணா, சப் இன்ஸ்பெக்டர் லதா, பீருமேடு தாலுகா வட்ட வழங்க அலுவலர் மோகனன், வட்ட வழங்க அலுவலர்கள் வினோதினி உத்தமபாளையம், வளர்மதி பெரியகுளம், பாலமுருகன் போடி,
சதீஷ்குமார் தேனி , கண்ணன் ஆண்டிபட்டி, உட்பட தமிழக, கேரள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்