
அகில இந்திய அளவிலான கூடை பந்தாட்ட இறுதிப் போட்டியை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைப்பு
தேனிமாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் பி.டி.சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 64 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த 15ஆம் தேதி துவங்கி தொடர்ந்து 7 நாட்களாக நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றது.
லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து நேற்று மாலை இறுதிப் போட்டியை தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். இறுதிப் போட்டியில் சென்னை இந்திய வங்கி அணிக்கும், சென்னை வருமானவரித்துறை அணிக்கும் இடையே போட்டிகள் நடைபெற்றது. பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி 90க்கு 80 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சுழற்கோப்பையை வென்றது.
அதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூபாய் 50ஆயிரம் வழங்கினர். இரண்டாம் இடம் பிடித்த சென்னை வருமானவரித்துறை அணிக்கு அழகு சங்கரலிங்கம் செட்டியார் நினைவு கோப்பை மற்றும் ரூபாய் 40 ஆயிரம் வழங்கப்பட்டது.
மூன்றாம் இடம் பிடித்த லோனோவாலா கப்பல்படை அணிக்கு பொன்னையா நாயுடு சீதையம்மாள் நினைவு கோப்பை மற்றும் ரூபாய் 30 ஆயிரம் வழங்கப்பட்டது. நான்காம் பிடித்த புதுடெல்லி இந்திய விமானபடை அணிக்கு செல்வகுமாரபாண்டியன் நினைவாக கோப்பை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக அதிக புள்ளிகளை அணிக்காக சேர்த்த சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்ட சென்னை இந்தியன் வங்கி அணி வீரரான முயன்பக் கூடைப்பந்தாட்ட வீரருக்கு அருண் மோட்டார்ஸ் உரிமையாளர் பவுன் கோயபல்ஸ் சார்பாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பி.சி.சிதம்பரசூரியவேலு மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.