
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் வளர்ப்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டுபேரவை தலைவர் ராஜசேகர், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நல்ல மணி காந்தி, ஜெய்கணேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 770 காளைகள், அதனை அடக்க 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் ரொக்கப் பரிசுகள், சைக்கிள், ட்ரெஸ்ஸிங் டேபிள், மிக்சி, கட்டில் சேர்,, உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் ,மாடுபிடி வீரர்களுக்கும், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டது. மைதானத்தில் சீருடை அணிந்த வீரர்கள், துள்ளி குதித்து வந்த காளைகளை போட்டிபோட்டு மடக்கி பிடித்து பரிசுகளை தட்டி சென்றனர். அதே போல் வீரர்களை நெருங்கவிடாமல் திமிலை குலுக்கி பிடிபடாமல் சென்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 33 பேர் காயமடைந்தனர்.
மதுரை அரசு மருத்துவமனைக்குமேல்சிகிச்சைக்காக 6 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வலையங்குளத்தை சேர்ந்த அய்யனார் (வயது 20) மாடுபிடிவீரர் என்பவர் மாடு முட்டி ஆபத்தான நிலையில் அனுப்பி வைக்கப்பட்டு வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
ஜல்லிக்கட்டு விழா மாலை 3.35 மணிக்கு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை காண ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.