
ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு புகாரில் ஊராட்சி செயலர்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருபவர் வீரபத்திரன்.இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஊராட்சி மன்ற செயலாளர் பதவி வகித்து வருகின்றார்.
இவர் பதவி ஏற்றது முதல் தற்போது வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கல்லூரியில் படித்து வரும் தனது மகன் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தற்காலிக கணினி ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பெயர்களில் போலியாக கணக்கு எழுதி அவர்களது பெயரில் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சில்வார்பட்டி பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் ஐ நேரில் சந்தித்து ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு புகாருக்கு ஆளான சில்வார்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும், தணிக்கை துறையினர் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்திட வேண்டியும், முறைகேடுகளில் ஈடுபட்ட ஊராட்சி செயலரை பணிநீக்கம் செய்திட வேண்டியும், கோரிக்கை மனு அளித்துள்ளனர்.