June 8, 2025
ஜல்லிக்கட்டு காளை குத்தி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி

ஜல்லிக்கட்டு காளை குத்தி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி

மதுரை:

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், காளை முட்டி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் நிதியுதவியை,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , பல்வேறு நேர்வுகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது காளை முட்டி உயிரிழந்த 3 பேர் மற்றும் கழிவுநீர்க் குழியில் மூழ்கி உயிரழந்த ஒருவர் என 4 நபர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூபாய் 3 இலட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 12 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் 14.01.2025-அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை வடக்கு வட்டம். விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 12.02.2025-அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்ற வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (வயது 23).என்பவர் மாடு முட்டியதில் காயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 19.02.2025-அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கடந்த 16.03.2025-அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்ற வாடிப்பட்டி வட்டம், மேலக்கால் கிராமம், உட்கடை கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்பாண்டி (வயது 24).
மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாடிப்பட்டி வட்டம், டி.ஆண்டிப்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சந்தனகருப்பு,
கிருஷ்ணவேணி தம்பதியரின் இரண்டு குழந்தைகள் கேசவன் மற்றும் ரோஷன் ஆகிய இருவரும் கடந்த 15.3.2025-அன்று வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த கழிவுநீர்க் குழியில் விழுந்துள்ளனர். இச்சம்பவத்தில் நீரில் தத்தளித்த ரோஷன் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு குழந்தை கேசவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் , மேற்குறிப்பிட்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த நபர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அன்னாரது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூபாய் 3 இலட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , மேற்குறிப்பிட்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த உயிரழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூபாய் 3 இலட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 12 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அன்பழகன் , வருவாய் கோட்டாட்சியர் ர.த.சாலினி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.